ஈழம்-மாநகராட்சி கூட்டத்தில் பாமக வெளிநடப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேச மேயர் மா.சுப்ரமணியம் அனுமதி மறுத்ததால், அதைக் கண்டித்து பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை மேயர் மா.சுப்ரமணியம் தலைமையில் தொடங்கியது. முதலில் காங்கிரஸ் உறுப்பினர் சைதை ரவி எழுந்து, சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தைப் படித்தார்.
அப்போது பாமக குழு தலைவர் ஜெயராமன் எழுந்து ஈழத் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசிக்க விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு அனுமதி தர மா.சுப்ரமணியம் மறுத்தார்.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயராமன் தொடர்ந்து படித்தார். பின்னர் அவரும், அவரது கட்சியினரும் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.
மாநகராட்சி மன்ற வாசலில் அமர்ந்து கோஷமிட்டனர். அப்போது ஜெயராமன் கூறுகையில், இலங்கையில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பேச அனுமதி கோரினோம். அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தனர் என்றார்.