தூங்கும் இட தகராறு-வியாபாரியை கொன்ற பிச்சைக்காரர்
திருச்சி: திருச்சி அருகே தூங்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வியாபாரி ஒருவரை பிச்சைக்காரர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே கிராப்பட்டியை சேர்ந்த சர்புதீன் என்பவரின் மகன் முகமது ரபீக் (38). இவரது மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டார். அவர் மட்டும் திருச்சியில் தங்கியிருந்து பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.
மனைவி இறந்ததை அடுத்து அவர் குடிபழக்கத்திற்கு ஆளானார். வீட்டு செல்லுவதை தவிர்த்துவிட்டு இரவு கிராப்பட்டி கிறிஸ்தவ கல்லறை பகுதியில் மரத்தடியில் படுத்து தூங்கி விடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் ரபீக்கை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
இந் நிலையில் திருச்சி கிராப்பட்டி அண்ணாநகர் பின்புறம் உள்ள புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது ரபீக் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கொன்றது யார் என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ரபீக்கை கொன்றது கேரளாவை சேர்ந்த சாஜி (32) என்பவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பகுதியில் பிச்சை எடுத்து வரும் சாஜி வழக்கமாக கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் தான் படுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக ரபீக்கும் அங்கு வந்து தூங்கியதை அடுத்து இருவருக்கும் இடையை சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சாஜி, ரபீக்கை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதையடு்த்து போலீசார் சாஜியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications