கத்திரி வெயில் முடிந்தது - கடைசி நாளில் வறுத்தெடுத்த வெயில்
சென்னை: ஒரு வழியாக அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் முடிந்தது. ஆனாலும், கடைசி நாளான நேற்று மிகக் கடுமையான வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் சென்னையில் மாலையில் காற்று வீசத் தொடங்கியதால் சற்று அனல் அடங்கி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஏப்ரல் மாதம் முதலே கடும் வெயிலை சந்தித்தது தமிழம். பகல் நேரங்களில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்கு புழுக்கம் போட்டுத் தள்ளியது.
மே மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. அன்று முதல் வெயில் வெளுத்துக் கட்டி வந்தது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் அடித்தது.
சென்னையில் 106 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. தென்மாவட்ட பகுதிகளான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால், தென் தமிழக மக்கள் சற்று அக்னி அவஸ்தையிலிருந்து தப்பினர்.
நேற்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் நேற்றும் வெயில் வெளுத்துக் கட்டியது. இன்றுதான் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறதோ என்று கருதும் அளவுக்கு வெயில் வெளுத்தது.
நேற்று சென்னை நகரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பமாக இருந்தது.
மாலையில் சற்று வெயில் தணிந்து திடீரென சூறைக் காற்று வீசியது. அப்படியே வெப்பம் குறைந்து குளுமை வந்ததால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இன்றும் காலையிலிருந்தே வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் கூட வெயிலின் தாக்கம் ஒரேயடியாக குறையாது, படிப்படியாகத்தான் குறையும், சில நாட்களுக்கு வெப்பல் சலனம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.