மந்தகதியில் 4 வழிச் சாலை பணி-போக்குவரத்தால் திணறும் திருச்சி
திருச்சி: சென்னை-மதுரையை இணைக்கும் நான்கு வழிச்சாலை பணிகள் திருச்சி பகுதிகளில் மிக மந்தமாக நடப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை, மதுரை இடையில் பயணிக்கும் வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 4,247 கிமீ., தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில் 2,999 கிமீ தூரத்தை தேசிய நெடுஞ்சாலை துறையும், 1,248 கிமீ தூரத்தை தமிழக நெடுஞ்சாலை துறையும் விரிவுபடுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சி வழியாக செல்லும் சென்னை-மதுரை நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை முதல் திண்டிவனம் ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருப்பதால் மீதமுள்ள 328 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகள் 70 கிமீ., தூரம் கொண்ட திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை-பாடலூர்(93 கிமீ), பாடலூர்-திருச்சி (40 கிமீ), திருச்சி-துவரங்குறிச்சி (61 கிமீ), துவரங்குறிச்சி-மதுரை (64 கிமீ) என ஐந்து கட்டங்களாக பிரித்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த வழியில் 10 பை-பாஸ் சாலைகளும், 14 பெரிய பாலங்களும், 8 ரயில்வே பாலங்களும் கட்டப்படுகின்றன.
கடந்த 2007ல் ஆரம்பமான இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். சமயபுரம் முதல் திருச்சி வரை உள்ள பகுதிகளை தவிர்த்த மற்ற பகுதிகளில் வேலைகள் கிட்டதட்ட நிறைவு பெற்றுவிட்டன.
ஆனால், சமயபுரம்-திருச்சி பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.
இதனால் சுமார் 20 கிமீ தூரத்துக்கு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதனால் சென்னை-மதுரை பயணத்தில் சுமார் 1 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.