கோவையில் 3 பேருக்கு 'ஸ்வைன் ப்ளூ' அறிகுறி?
கோவை: கோயம்புத்தூரில் 5 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு 'ஸ்வைன் ப்ளூ' அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் 'ஸ்வைன் ப்ளூ' எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 100 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து காற்றின் மூலம் எளிதாக பரவும் இந்த நோய் தங்கள் நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தாக்கிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் 'ஸ்வைன் ப்ளூ' தாக்குதல் இருக்கும் நாடுகளுக்கு செல்லுமாறு தங்கள் நாட்டு குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.
இந் நிலையில், கோயம்புத்தூரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று திரும்பிய 5 வயது சிறுவனுக்கு 'ஸ்வைன் ப்ளூ' அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரிக்கும் 'ஸ்வைன் ப்ளூ' தாக்குதல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.