வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
டெல்லி& சென்னை: ஐந்து கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மக்களவையின் 543 தொகுதிகளுக்கான 5 கட்டமாக தேர்தல் நடந்தது. கடைசி கட்டத் தேர்தல் 13ம் தேதி நடந்தது.
எப்படி எண்ணப்படுகிறது...?
ஒரு மக்களவை தொகுதியில் 6 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பேரவை தொகுதிகயின் வாக்குகளை எண்ண 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேசைக்கு இருவர் வீதம் 28 பேர் வாக்குகளை எண்ணுகிறார்கள்.
ஒரு மக்களவை தொகுதிக்கு 91 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். இது முழுக்க வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்காக நாடு முழுவதும் 1080 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை உடனுக்குடன் அறிய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜென்ட்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லக் கூடாது. சாப்பாடு, தண்ணீர் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். கண்ணாடி பொருட்கள், தீ பற்றும் பொருட்கள், தீப்பெட்டி கொண்டு செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
மிகச் சிறிய தொகுதியின் முடிவுகள்தான் முதலில் தெரிய வரும். அந்த வகையில் தமிழகத்தில் நாகை தொகுதியில்தான் மிகக் குறைந்த அளவாக, அதாவது 7 பேரே போட்டியிட்டுள்ளனர். எனவே நாகை தொகுதியின் முடிவு முதலில் தெரிய வரும்.
தென்சென்னையில் 43 பேர் போட்டியிட்டுள்ளனர். எனவே இதன் முடிவு தெரிய சற்று கால தாமதமாகும்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி முடிவுகள் பிற்பகல் 2 மணிக்குள் தெரிந்து விடும்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையையும் முடிக்க 15 நிமிடங்கள் ஆகும்.