நின்ற லாரி மீது கார் மோதல் - 3 பேர் பலி
மதுரை: மதுரை ரிங்ரோட்டில் உள்ள மண்டேலா நகர் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். இவரது மகன் ஜெயசெல்வம் (30).
அதே பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (30), போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சண்முகத்தின் மகன் வேல்பாண்டி (30), கே.டி.சி. நகரை சேர்ந்த பச்சைமால் (25), தூத்துக்குடியை சேர்ந்த ஐசக் (24) ஆகியோர் சென்னைக்கு ஒரு காரில் சென்றனர்.
மதுரை ரிங்ரோட்டில் உள்ள மண்டேலா நகர் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதனால் காரில் இருந்த ஜெயசெல்வம், வேல் பாண்டி, பச்சைமால் ஆகிய மூன்று பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கி இருந்த மூன்று பேரின் சடலத்தை மீட்டனர்.
அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.