ஜெவுக்கு எதிராக களமிறக்கப்படும் கனிமொழி?
எதிர்காலத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்படுவாராம் கனிமொழி.
41 வயதாகும் கனிமொழி ஆரம்பத்தில் கவிஞராக மட்டுமே அறியப்பட்டவர். எனது கலையுலக வாரிசு என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்டவர். ஆனால் 2007ல் திடீரென நடந்த சில சம்பவங்களால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார் கனிமொழி.
மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல், அதனால் டெல்லியில் ஏற்பட்ட வெற்றிடம். இதை நிரப்ப அரசியலுக்கு வந்தவர்தான் கனிமொழி.
இந் நிலையில் இப்போது மாறன் குடும்பத்தினர், கருணாநிதி குடும்பத்தினருடன் சமரசமாகி விட்டனர். தயாநிதி மாறனும் மீண்டும் மத்திய அமைச்சராகி விட்டார். அதை விட முக்கியமாக மு.க.அழகிரியும்.
தற்போது மாநில அரசியலுக்கு மு.க.ஸ்டாலின், டெல்லி அரசியலுக்கு மு.க.அழகிரி-தயாநிதி என திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது.
கனிமொழியும் மத்திய அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதை விட முக்கியமான பணியை அவருக்கு கொடுக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது- ஜெயலலிதாவுக்கு எதிராக திமுகவின் பீரங்கியாக கனிமொழி முதன்மைப்படுத்தப்படவுள்ளார் என்பதே.
ஜெயலலிதாவுக்கு இணையாக திமுகவில் எந்தப் பெண் தலைவரும் இல்லை. அதை கனிமொழி நிரப்புவார் என்கிறார்கள்.
இதுகுறித்து கனிமொழி கூறுகையில், கட்சியை அடிமட்டத்திலிருந்து புதுப்பிக்கும் பணியை நான் தொடங்குவேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. கட்சியை பலப்படுத்த குறிப்பாக மகளிர் அணியை பலப்படுத்த நான் தீவிரமாக உழைக்கப் போகிறேன் என்றார் கனிமொழி.