ஆந்திராவில் கொடூரம்-பெண்ணை கும்பலாக கற்பழித்த போலீஸார்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், காவல்துறை பயிற்சி அகாடமியின் சமையல் காரப் பெண்ணை, சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் கும்பலாக கற்பழித்துள்ளனர்.
சித்தூர் மாவட்ட போலீஸ் பயிற்சி மையத்தில் சமையல் வேலை செய்து வருபவர் நந்தினி. 28 வயதாகும் இவரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார்.
இதனால் வேதனை அடைந்த நந்தினி, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்து அவரைத் தடுத்து காப்பாற்றிய சில போலீஸார், என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர்.
நடந்ததைக் கூறி அழுதுள்ளார் நந்தினி. அவருக்கு ஆறுதல் கூறி, குற்றமிழைத்த சப் இன்ஸ்பெக்டரை பிடிக்க முயற்சிக்காமல், அந்த போலீஸார் குரூர புத்தியுடன் நந்தினியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அவரை குளித்து விட்டு வருமாறு கூறியுள்ளார். நந்தினியும் குளிக்கப் போயுள்ளார். அப்போது அவரை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
பின்னர் குளித்து விட்டு வெளியே வந்த நந்தினியிடம் மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் தவிர வேறு 9 போலீஸாரையும் வரவழைத்து அனைவரும் அடுத்தடுத்து அந்த அப்பாவிப் பெண்ணைக் கற்பழித்துள்ளனர்.
இதில் நந்தினி மயக்கமடைந்தார். பின்னர் அவரை விட்டு விட்டு அத்தனை அயோக்கிய காவலர்களும் தப்பி விட்டனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த நந்தினி, எஸ்.பி. ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.