துணை முதல்வர் பதவி - ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னை: துணை முதல்வராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவதாக தகவல் வெளியானவுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராதிகா செல்வி ஆகியோர் பொன்னாடை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தமிழக சட்டமன்ற சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், சட்டமன்ற செயலாளர் எம்.செல்வராஜ், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், தா.மோ.அன்பரசன், டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, தி.மு.க. மகளிர் அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரசு பொதுத்துறை முதன்மை செயலாளர் தேவ.ஜோதி ஜெகராஜன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சி.பி.சிங், ஏசு அழைக்கிறார் அமைப்பின் நிறுவனர் மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனின் மகன் பால் தினகரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், போலீஸ் இணை கமிஷனர் ரவி உள்பட ஏராளமான போலீஸ் அதிகாரிகளும், முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி, ஜே.கே.ரித்தீஷ், தூத்துக்குடி ஜெயதுரை, தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, இஸ்லாமிய கலை இலக்கிய கழகத்தலைவர் அபுபக்கர், தியாகராயநகர் அலிமா சம்சுகனி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் வீட்டிற்கு முன்பு பெரும் திரளான தொண்டர்கள் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் கொண்டாடினர்.
கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications