இலங்கை பலி எவ்வளவு?-தெரியாமல் போக கூடும்: ஐநா
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் ஜான் ஹோம்ஸ் கூறுகையில், ஆசியாவின் மிக நீண்ட போராக கருதப்படும் இலங்கைப் போரில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என கருதுகிறோம்.
கடைசி மாதங்களில் மட்டும் பல ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இலங்கைப் போரில் உண்மையில் எத்தனை பேர் இறந்தனர் என்ற சரியான எண்ணிக்கை எங்களிடம் இல்லை. அதுகுறித்த உண்மையான எண்ணிக்கையை உலகம் அறியாமலேயே போகக் கூடும்.
கடைசிக் கட்டத்தில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக டைம்ஸ் இதழ் கூறியிருப்பது குறித்து நான் உறுதி செய்ய முடியாது. அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அதை விட அதிகமாகவும் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கலாம். அதை விட குறைவாகவும் மரணம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எங்களுக்கு அதுகுறித்து சரியாகத் தெரியவில்லை.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சுயேச்சையான, சுதந்திரமான, நியாயமான, விரிவான விசாரணை மட்டுமே. அதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஏப்ரல் மாதம் முடிய கிட்டத்தட்ட 7000 பேர் இறந்திருப்பதாக நாங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் அறிய வந்திருக்கிறோம். அதன் பின்னர் கிட்டத்தட்ட சராசரியாக தினசரி 1000 பேர் வரை இறந்துள்ளனர்.
இலங்கைப் போரில் உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற உண்மையான புள்ளி விவரத்தை நாம் கடைசி வரை அறியாமலேயே போகக் கூடும். காரணம், இதுதொடர்பாக ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டால், அதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்குமா என்பது சந்தேகம்தான்.
ஆனாலும், கடைசிக்கட்டத்தில் பல்லாயிரக்க்கணக்கானோர் படுகொலையாகியுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.