லோக்சபா சபாநாயகராக மீரா குமாருக்கு வாய்ப்பு
டெல்லி: திடீர் திருப்பமாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மீரா குமாரின் பெயர் அடிபடுகிறது.
மறைந்த பாபு ஜெகஜீவன் ராமின் மகள்தான் மீரா குமார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் கிஷோர் சந்திர தியோவின் பெயர்தான் அடிபட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென மீரா குமார் லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.
நீர்வளத்துறை அமைச்சராக சில நாட்களுக்கு முன்புதான் மீரா குமார் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அவரை சபாநாயகராக்க சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
மீரா குமார் சபாநாயகராக நியமிக்கப்பட்டால், அப்பதவியில் அமரும் முதல் பெண், அதிலும் தலித் பெண்மணி என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
இந்திய அயலுறவுப் பணியில் இருந்தவர் மீரா குமார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பணியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மீரா குமாரின் பெயரைத் தவிர தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவியும், ராஜஸ்தான் எம்.பியுமான கிரிஜா வியாஸின் பெயரும் கூட சபாநாயகர் பதவிக்கு அடிபடுகிறது. இருப்பினும் மீராவுக்கே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.
கிஷோர் சந்திர தியோவுக்கான வாய்ப்புகள் திடீரென மங்கிப் போக காரணம், அவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தொடர்பான சான்றிதழ் குறித்து தொடரப்பட்டுள்ள கோர்ட் வழக்காகும். இதனால்தான் அவரது பெயரை பரிசீலனைப் பட்டியிலிருந்து காங்கிரஸ் நீக்கி விட்டதாம்.
சபாநாயகர் பதவிக்கு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தவுள்ளது. கடைசியாக 1991ம் ஆண்டு சிவராஜ் பாட்டீல் சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே சபாநாயகர் பொறுப்பில் காங்கிரஸும், பாஜகவும் அமர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications