நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்பார்கள்
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது.
மே 22ம் தேதி மன்மோகன் சிங் 19 அமைச்சர்களுடன் பங்கேற்றார். இவர்களை தொடர்ந்து 28ம் தேதி மேலும் 59 அமைச்சர்கள் பதவியேற்க, அமைச்சரவை முழுமை பெற்றது. இதை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
காலை 11.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் துவங்கிய இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகள், திட்டங்கள், பொருளாதார மேம்பாடு, சமூக நல திட்டங்கள், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை பற்றி மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் அறிவித்த 100 நாள் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஜூன் 4ம் தேதி ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிகழ்த்த இருக்கும் உரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந் நிலையில் 15வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்ட தொடர் நாளை துவங்கி, வரும் 9ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து கொள்ள அனைத்து எம்.பிக்களும் டெல்லி நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறு நாளும் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் மாணிக்ராவ் காவிட் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
மரபுப்படி, அவை முன்னவரான பிரணாப் முகர்ஜி முதலாவதாகவும், எதிர்கட்சி தலைவரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானி இரண்டாவதாகவும் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), அர்ஜூன் சரண் சேத்தி (பிஜூ ஜனதா தளம்), பைரன் சிங் எங்க்டி (காங்கிரஸ்), சுமித்ரா மகாஜன் (பாஜக) ஆகிய 4 மூத்த எம்.பி.க்கள் குழுவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
4ம் தேதி ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்...
இதை தொடர்ந்து வரும் 3ம் தேதி புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடக்கிறது.
4ம் தேதி ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி, உரை நிகழ்த்துகிறார். அடுத்த மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் அவரது உரையின் மீது விவாதம் நடக்கவிருக்கிறது.