அப்பாவித் தமிழர்கள் படுகொலை - விசாரணை நடத்த வேண்டும்: ஆம்னஸ்டி கோரிக்கை
கொழும்பு: இலங்கையில் கடைசிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. தனக்குத் தெரிந்த தகவல்களை இனியும் மறைக்க முயலக் கூடாது. உண்மைகளை அது வெளியிட வேண்டும் எனவும் ஆம்னஸ்டி கோரியுள்ளது.
இலங்கையில், கடைசிக்கட்டப் போரின்போது ஒட்டுமொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுகொலை குறித்த தகவல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கும், அவரது தூதர் விஜய் நம்பியாருக்கும் தெரியும் எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சண்டையின்போது உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை உடனடியாக விசாரித்து அறிய வேண்டும் என ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆம்னஸ்டியின் ஆசியா பசிபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஜரிபி கூறுகையில், போரின்போது இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஏராளமான போர்க் குற்றங்களை செய்துள்ளனர். இதுகுறித்து சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை டைம்ஸ் செய்தி வலியுறுத்துவதாக உள்ளது. உண்மை வெளிவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐ.நா. எடுக்க வேண்டும். வடகிழக்கு இலங்கையில் நடந்த ரத்தக்குளியல் குறித்த தகவல்கள் வெளிப்பட வேண்டும்.
போரின்போது எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற எண்ணிக்கை நிச்சயம் ஐ.நா.வுக்குத் தெரியும். எனவே அதை இனியும் அது மறுக்காமல் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும்.
போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தாலும் கூட இன்னும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
2 லட்சத்து 80 ஆயிரம் அப்பாவி மக்கள் மிகக் குறுகிய அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மிகப் பெரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தே ஆக வேண்டும். இதை ஐ.நா. செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.