ரயிலை தவறவிட்டு டெல்லியில் தவித்த தமிழர்களுக்கு உதவிய அழகிரி
சென்னை: வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த சிலர் டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயிலை தவறவிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மத்திய அமைச்சர் அழகிரி ஏசி வசதி கொண்ட பெட்டியில் பயணத்துக்கு ஏற்பாடு செய்து தவித்து கொண்டிருந்த அவர்களுக்கு தக்க சமயத்தில் உதவினார்.
சமீபத்தில் தமிழகத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீநகர் உள்ளிட்ட வட இந்தியாவில் சுற்றுலா பயணம் செய்தனர். அவர்கள் கிங் பிஷ்ஷர் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி திரும்பி, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வர கிராண்ட் டிரங் எக்ஸ்பிரசில் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் மதியம் வரவேண்டிய விமானம் வெகு தாமதாக இரவு 7 மணிக்கு டெல்லி வந்தது. ஆனால் மாலை 6.40 மணிக்கு ஜிடி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது. இதையடுத்து விமான தாமதம் காரணமாக பயணிகள் ரயிலை தவறவிட நேரிட்டது.
மேலும், அவர்களது முன்பதிவு அனைத்தும் வீணானது. அடுத்த ரயிலில் உடனடியாக முன்பதிவு கிடைக்காது என்பதால் அவர்கள் எப்படி சென்னை திரும்புவது?, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். வேறு வழியில்லாமல் விமான நிலையத்தில் நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த மத்திய அமைச்சர் அழகிரி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு சாப்பாடு, தங்கும் வசதிகள் ஆகியவற்றை சொந்த செலவில் செய்து கொடுத்தார்.
மேலும், உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழக பயணிகளுக்கு மறுநாள் ரயிலில் சிறப்பு ஏசி பெட்டி ஒன்று பொருத்தப்பட்டு அதில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் அழகிரிக்கு பூங்கொத்து, பொன்னாடை கொடுத்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். நீங்கள் தக்க சமயத்தில் உதவவில்லை என்றால் நாங்கள் பரிதவிக்கு போயிருப்போம் என அவரிடம் நெகிழ்ச்சியாக கூறினர்.












Click it and Unblock the Notifications