முதல் முறையாக பார்வையற்ற நீதிபதி நியமனம்
சென்னை: தமிழக நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக பார்வையற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி கிராமத்தை சேர்ந்தவர் டி.டி.சக்கரவர்த்தி (41). வக்கீலான இவர் ஆரம்பத்தில் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக செயல்பட்டார்.
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். இதையடுத்து தமிழக அரசின் தேர்வு எழுதி மாவட்ட நீதிபதி பயிற்சிக்கு தேர்வு பெற்றார். 2008-ல் நடந்த நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார்.
தமிழ்நாடு மாவட்ட நீதித்துறை அகாடமியில் மார்ச் 11-ம் தேதி பயிற்சியில் சேர்ந்து 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை கோர்ட்டிலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார்.
தற்போது கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் கோர்ட்டில் சக்ரவர்த்தி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வையற்றவராக இருந்தாலும் வக்கீல் தொழிலில் சிறப்பாக பணிபுரிந்ததால் அவர் தற்போது நீதிபதியாக உயர்ந்துள்ளார்.
சக்ரவர்த்தி நீதிபதியாக பதவி ஏற்றது குறித்து அவரது மனைவி திலகா, கூறும்போது, எந்த ஒரு வழக்கு விவாதத்தையும் ஒருமுறை வாசித்தால் அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்வார்.
தான் விரும்பிய தொழில் மீது அவர் வைத்திருந்த அக்கறையும் நீதிபதியாக உயர வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், உழைப்பும்தான் இந்த பதவியை வழங்கி இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.
இந்தியாவிலேயே பார்வையற்ற ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றிருப்பது இதுவே முதல்முறை. அதுவும் தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டிலேயே நீதிபதி ஆகி இருப்பது தமிழ்நாட்டுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பெருமை என்று நீதிபதி சக்ரவர்த்தியின் அண்ணன் கணேஷ் கூறினார்.