சென்னையில் காவலாளிகளை பணியமர்த்த 18 நிபந்தனைகள்
சென்னை: ஜெயின் கோவிலில் பூசாரியை கொன்றுவிட்டு ரூ. 2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் புதிய காவலாளிகளை நியமிக்க போலீசார் 18 நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
சென்னை தங்கசாலையில் உள்ள ஜெயின் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம கும்பல் உள்ளை புகுந்து தலைமை பூசாரியை கொன்றுவிட்டு ரூ. 2 கோடி மதிப்பு கொண்ட தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்துக்கும் சில நாட்கள் முன்னதாக கோவில் காவலாளி பகதூர் சிங் என்பவர் விடுமுறை எடுத்து கொண்டு சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து அவருக்கு பதிலாக பிரேம் சிங் என்பவர் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் கோவிலை காவல் காத்து வந்த பிரேம் சிங்கிற்கும் சம்பவத்துக்கும் அதிக தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் தற்போது தலைமறைவாகி விட்டதால் போலீசாரின் சந்தேகங்கள வலுவடைந்துள்ளது.
இதையடுத்து போலீசார் விடுமுறையில் சென்றுள்ள பகதூர் சிங்கிடம் விசாரணை மேற்கொள்ள நேபாளம் சென்றுள்ளனர்.
கொலை நடந்த அன்று பிரேம் சிங்குடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி குருசாமி போலீசாரிடம் விசாரணையின் போது கூறுகையில், அன்று மாலை பிரேம்சிங் நான்கு நேபாளிகளுடன் பேசி கொண்டிருந்தார். யார் இவர்கள் என கேட்ட போது தனது உறவினர்கள் என கூறினார் என்றார்.
இதையடுத்து பிரேம் சிங் தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த கை ரேகைகள் பிரேம் சிங்கின் கைரேகை தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து போலீசார் காவலாளி குருசாமியின் உதவியுடன், கொலையாளிகளின் உருவபடத்தை கம்ப்யூட்டரில் வரைந்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இனிமேல் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக காவல்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதையடுத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் இருக்கும் காவலாளிகளை குறித்த முழு தகவல்களையும் திரட்ட துவங்கியுள்ளது.
புதிய காவலாளிகளை பணியில் அமர்த்தும் போது அவர்களது பயோ டேட்டாவை அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பூக்கடை பகுதியில் இருக்கும் 18 ஜெயின் கோவில் நிர்வாகிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட்டத்துக்கு துணை ஆணையாளர் பெரியய்யா ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,
புதிய கவாலாளிகளை நியமிக்கும் முன்பாக அவர்களை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர்களது பெயர், தற்காலிக முகவரி, நிரந்தர முகவரி, யாரால் பணியில் சேர்த்துவிடப்படுகிறார், அவர் இதுவரை எங்கெங்கு வேலை பார்த்துள்ளார் உள்ளிட்ட 18 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பம் ஒன்றை தயாரித்துள்ளோம்.
இந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது கோவில் நிர்வாகம் முழுமையாக நிரப்பி, அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.