பஸ் கட்டணம்-குறைக்க கோரி பாமக போராட்டம்
சென்னை: மக்களவைத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பஸ் கட்டணக் குறைப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலின் போது தமிழக அரசு பஸ் கட்டணத்தைக் குறைத்தது. தேர்தல் ஆணைய உத்தரவால் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
இந் நிலையில் கட்டணக் குறைப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னையில் பாமக சார்பில் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இன்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணி,
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு பஸ் கட்டண குறைப்பை அமல் செய்தது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தேர்தலின்போது செய்யப்பட்ட இந்த குறைப்பு, நன்னடத்தை விதிகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையம் கூறியதையடுத்து கட்டணக் குறைப்பு கைவிடப்பட்டது.
எனினும் மக்கள் நலன் கருதி இந்த கட்டணக் குறைப்பை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கட்டண குறைப்பை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது தேர்தலுக்காக செய்யப்பட்ட நாடகம், மக்களை ஏமாற்றும் வேலை என்பது உறுதியாகிவிடும்.
சென்னையில் 2700 பஸ்கள் ஓடுகின்றன. இதில் 500 மட்டுமே சாதாரண பஸ்கள், மற்ற பஸ்களில் விதவிதமான பெயர்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அனைத்திலும் ஒரே விதமான கட்டணத்தை அமல் செய்து கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதே போல பல்வேறு மாவட்டங்களிலும் பாமக சார்பில் இன்று போராட்டங்கள் நடந்தன.
பாமகவில் இளைஞர்கள், பெண்கள் அணி:
இதற்கிடையே பாமகவில் இளைஞர் அணி, இளம் பெண்கள் அணி ஆகியவை உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தோற்கவில்லை. அதிகார பலம், வஞ்சகம், பணபலம், மின்னணு தேர்தல் எயந்திரத்தில் தில்லுமுல்லு ஆகியவை செய்து தான் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த மின்னணு தேர்தல் எந்திரத்தையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் கண்டுபிடித்தனர். இதில் பல தவறுகள் செய்ய முடியும் என்று அறிந்தவுடன் அங்கு பழைய முறையான ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வந்தனர். இதனால் தற்போது அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல் ஓட்டுகள் மூன்று நாட்கள் எண்ணப்பட்டன.
பாமகாவை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திமுக தலைமை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் பாமக வெற்றி பெற்றால் உங்கள் பதவி பறிக்கப்படும் என்று பயமுறுத்தி இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கடந்த முறை ஒரு நாடாளுமன்ற இடத்தில் மட்டும் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் 19 இடங்களை பெற்றுள்ளார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் 32 வருட கால இரும்பு கோட்டையாக இருந்த கொல்கத்தாவை மம்தா பானர்ஜி உடைத்து இருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் பிரச்சனை. தேவையில்லாத தொழிற்சாலை அமைவதை கண்டித்து போராட்டம் நடத்தியது தான் இந்த வெற்றிக்கு காரணம்.
இதேபோல் திமுக கூட்டணியில் பாமக இருந்த போதும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியது. சிறப்பு பொருளாதார மண்டலம், பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், மது ஒழிப்பு கொண்டு வர வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினோம். இருப்பினும் பாமக தேர்தலில் தோற்றுள்ளது.
இதை சரி செய்வதற்கு கிராமந்தோறும் 10 பேர் கொண்ட இளைஞர் அணி, 10 பேர் கொண்ட இளம்பெண்கள் அணியை உருவாக்க வேண்டும். இந்த அணயில் 16 வயது முதல் 25 வயது வயதுள்ளவர்களை சேர்க்க வேண்டும்.
இந்த அணிகளை 20 பேர்கள் கொண்ட குழு அந்தந்த ஊர்களுக்கு சென்று மேற்பார்வையிட்டு கிளைத் தேர்தலை நடத்த வேண்டும். அதில் பொறுப்புள்ள, நேர்மையானவர்களை கட்சி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications