கருணாநிதி குறித்து அவதூறு-வைகோ மீது வழக்கு
சென்னை: முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மே மாதம் 16-ம் தேதி சென்னை அண்ணா சாலை பார்சன் காம்பளக்சில் உள்ள டைரக்டர் பாரதிராஜாவின் அலுவலகம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புரசைவாக்கம் தானா தெருவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, முதல்வரின் தூண்டுதலால்தான் டைரக்டர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது என்று முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறாக வன்முறையை தூண்டும் வகையில் கூறினார்.
இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே கூட்டத்தில் நேரத்தைத் தாண்டி பேசியதாக கூறி பழ. நெடுமாறன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications