'கள்':எதையும் சந்திக்க தயார்-பெஸ்ட் ராமசாமி
அவினாசி: தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், தடை விதித்தாலும் நாங்கள் கள் இறக்குவதை கைவிட மாட்டோம். எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கொங்கு முன்னேற்ற பேரவைத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
அவினாசியில் கள் இறக்குவதை தடை செய்யக்கூடாது என கோரி கொங்கு முன்னேற்ற பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில்,
தேர்தலுக்கு பிறகு கள் இறக்குவது குறித்து பரிசீலனை செய்வோம் என கூறிய தமிழக அரசு தற்போது கள் இறக்கும் விவசாயிகளை, கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளது.
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். என்ன நடவடிக்கை எடுத்தாலும், என்ன தடை விதித்தாலும் நாங்கள் ஒரு போதும் கள் இறக்குவதை கைவிட மாட்டோம்.
பொருளாதார ரீதியாக, சட்ட ரீதியாக, உடல் ரீதியாக, 'கள்' எந்த பிரச்னையும் ஏற்படுத்தாது. தற்போது விவசாயம் அடியோடு பொய்த்து போகின்ற நிலையில், விவசாயிகள் மற்றும் மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் கள் இறக்குவதற்கு அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும்.
இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு என்பது கிடையாது என்று, ஏற்கனவே பல புள்ளிவிவரங்களுடன் ரிவித்துள்ளோம். தமிழகத்தில் 8.40 லட்சம் ஏக்கரில் உள்ள ஆறு கோடி தென்னை மரங்களில், கள் இறக்குவதன் மூலம் 50 முதல் 75 லட்சம் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அருகில் இருக்கும் மாநிலங்களில் உள்ளது போல், தென்னை மரங்களுக்கு வரி விதிக்கலாம். விவசாயிகள் எக்காரணத்தை முன்னிட்டும் கள் இறக்குவதை யாரும் கைவிட்டு விட வேண்டாம். என்ன நடந்தாலும் எதையும் சந்திக்க தயாராகவே உள்ளோம் என்றார் பெஸ்ட் ராமசாமி.












Click it and Unblock the Notifications