2 குழந்தைகளை கடத்தியவனை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (36) டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது குழந்தைகள் தர்ஷன் (7), யாமினி (5).
நேற்று மாலை காரில் குழந்தைகளை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே அழைத்து வந்து விமானங்கள் டேக்-ஆப், லேண்ட் ஆவதைக் காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவரது காரில் இருந்த சாவியை எடுத்துச் சென்றுவிட்டான். வீடு திரும்ப நினைத்த சீனிவாசன் கார் சாவி காணாமல் போனதால் அதை சுற்று முற்றும் தேடினார்.
அப்போது அங்கு மீண்டும் வந்த அந்த நபர் சீனிவாசனிடம் பேச்சு கொடுத்தான். சாவியைத் தேடுவது போல நடித்த அவன், சீனிவாசனை தள்ளி போய் தேடுமாறு கூறினான். குழந்தைகளை காரில் அமருமாறு கூறினான்.
காருக்குள் சாவி இருக்கிறதா என்று தேடுவது போல நடித்த அவன் காருக்குள் ஏறி திடீரென காரைக் கிளப்பிக் கொண்டு குழந்தைகளோடு கிளம்பிவிட்டான்.
அவன் கடத்தல் ஆசாமி என்பதை தாமதமாக உணர்ந்த சீனிவாசன் உடனடியாக மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் கொடுத்தார்.
போலீசார் மிகத் துரிதமாக செயல்பட்டு காரின் விவரத்தைச் சொல்லி அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார்படுத்தினர்.
இதற்கிடையே சீனிவாசன் வீட்டுக்கு போன் செய்த அந்த நபர், குழந்தைகளை கடத்தியுள்ளதாகவும், பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் மிரட்டினான்.
எங்கு, எப்போது, எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதை பின்னர் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இந்நிலையில் அந்தக் கார் குன்றத்தூர் நோக்கி செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் தியாகராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அந்த பகுதியில் வந்த காரை தனது பைக்கை நடுரோட்டில் நிறுத்தி வைத்து தடுத்து நிறுத்தினர்.
காரை நிறுத்திய அந்த நபர் காரை விட்டு இறங்கி தப்பியோட முயன்றான். அவனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார் தியாகராஜன். அவனுடன் காவலர் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தபோதே போலீஸ் படையும் அங்கு வந்து அவனை அமுக்கியது. குழந்தைகளை மீட்டது
அவனை போலீசார் அடித்துத் துவைத்த போலீசார் விசாரணை நடத்தியபோது, அவனது பெயர் ஏசுவடியான் என்றும், நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.
அவன் மீது அம்பத்தூர், திருவள்ளூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், உளுந்தூர்பேட்டை மற்றும் கேரளாவில் பல்வேறு காவல் நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளது என்றும், ஏற்கனவே 7 முறை சிறை சென்றவன் என்றும் தெரியவந்தது.
மேலும் கார் திருட்டு வழக்கு சிறையில் இருந்த இவன் நேற்று முன்தினம் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளான். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவன் மாது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.
போலீசார் பிடியில் சிக்காவிட்டால் 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு காருடன் பெங்களூர் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக ஏசுவடியான் வாக்குமூலம் தந்துள்ளான்.
கடத்தல் சம்பவம் நடந்து 2 மணி நேரத்திலேயே குழந்தைகளை பத்திரமாக மீட்டு, கடத்தல்காரனை கைது செய்த போலீசாரை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் வெகுவாகப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications