தமிழர்களின் இதயங்களை கவர்வோம்-ராஜபக்சே
கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழர்கள் அச்சமின்றி வாழ வழி செய்வோம் என்றும் அவர்களது இதயத்தை கவர்வோம் என்றும் பேசினார்.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வென்றதையடுத்து துறைமுகப் பகுதியில் நடந்த விழாவில் தமிழில் பேசிய ராஜபக்சே கூறுகையில்,
இந்த போர் விடுதலை புலிகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு எதிரானது அல்ல. பாசத்துக்குரிய இலங்கை ராணுவ வீரர்களே, தீவிரவாதத்துக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. இனி நாம் தமிழர்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் தமிழ் மக்களை காக்க வேண்டும். அவர்கள் இங்கு பயமில்லாம் வாழ வேண்டும். இது நம்முடைய பொறுப்பு என்றார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த விழாவில் ''போர் முடிந்துவிட்டது. விடுதலை புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். நாடு சுதந்திரமாகிவிட்டது'' என்று எழுதப்பட்ட செய்தி சுருளை முப்படை தளபதிகளிடம் ராஜபக்சே வழங்கினர்.
விழாவில் ராணுவத்தின் பீரங்கி பட்டாலியன்கள் அணிவகுத்து சென்றன.
இதை தொடர்ந்து கடலில் இலங்கையின் கப்பற்படை கப்பல்களும் அணிவகுத்தன.
கடைசியாக இலங்கை விமான படையின் சாகச நிகழ்ச்சியுடன் விழா நிறைபெற்றது. விழாவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
உச்சக்கட்ட பாதுகாப்பு...
இந்த விழாவில் இலங்கையின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி நடந்த காலே பேஸ் கிரீன் கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
புலிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் கட்டிடங்களின் மேல் தளத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் இருந்தனர். விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இலங்கை அரசு நிலையில் வைத்திருந்தது.