மாநில சுயாட்சி-கருணாநிதி சூளுரை
சென்னை: மாநில சுயாட்சியை நிலை நாட்ட தொடர்ந்து பாடுபடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தனது 86வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்த அவரிடம், உங்கள் பிறந்தநாள் செய்தி என்ன என்று கேட்டதற்கு முதல்வர் அளித்த பதில்:
இந்த நாளை திமுக தொண்டர்கள் எழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் எங்களுடைய கொள்கை மேலும் வலுப்படுத்தப்படவும், மக்கள் மத்தியில் பதிய வைக்கவும் பாடுபடுவோம்.
மேலும் இந்திய ஒருமைப்பாடு, தமிழ் இன உணர்வு, மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசு முறை இவற்றோடு எங்களின் நீண்டநாள் முழக்கமான மாநில சுயாட்சி உரிமை ஆகியவற்றுக்கு பாடுபடுவோம்.
அண்ணா மற்றும் இந்திய பேரறிஞர்கள் கண்ட கனவை நனவாக்க திமுக சூளுரை மேற்கொள்ளும். திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான மாநில சுயாட்சி பல்வேறு நிலைகளில், பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.
இன்று என் பிறந்தநாளில் மாநில சுயாட்சி முழுமை பெறுவதற்கான பணியை நிச்சயம் தொடருவேன் என்று உறுதியளிக்கிறேன் என்பது தான் எனது செய்தி என்றார்.
கடந்த பிறந்தநாளின் போது சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினீர்கள். இந்த பிறந்தநாளில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, சேது சமுத்திர திட்டமே இன்னும் நிறைவேறவில்லை. முதலில் அந்தத் திட்டம் நிறைவேற பாடுபடுவேன் என்றார்.
அதிமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைவர்கள் உங்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்களே என்று கேட்டதற்கு,
தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாக இத்தகைய பண்பாடு இருந்து வருகிறது. அந்த பண்பாடு இருப்பவர்கள் மற்றும் அரசியல் பக்குவம் பெற்றவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து இது போன்ற நாட்களில் தோழமை உணர்வோடு வந்து வாழ்த்துவதை வரவேற்கிறேன் என்றார்.