சென்னை-திருச்செந்தூர் தினசரி ரயில்: மம்தா உறுதி
சென்னை: சென்னை-திருச்செந்தூருக்கு இடையே வாரமுறை ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாக தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரையிடம் ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயதுரை வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் சுமார் 12.15 மணிக்கு பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.
பதவி பிரமாணம் பெற்று கொண்டதை அடுத்து முதல் வேலையாக தனது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர்-சென்னை ரயிலை தினசரி விட வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்துக்கு சென்றார்.
மம்தாவை நேரில் சந்தித்து தனது மனுவை கொடுத்தார். அந்த மனுவில்,
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தற்போது வாரம் ஒரு முறை செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 19ம் தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும் என அப்போதைய ரயில்வை துறை அமைச்சர் லாலு அறிவித்தார்.
ஆனால், அப்போது தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்ததால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் செந்தூர் எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும் என ஜெயதுரை மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை வாங்கி கொண்ட மம்தா பானர்ஜி கூறுகையில், நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆக பதவியேற்று கொண்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பதவியேற்ற உடனே தொகுதி மக்களுக்காக உழைக்க நினைக்கும் உங்கள் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்போம் என்றார் மம்தா பானர்ஜி.