ஜெயின் கோவில் கொலை-கொள்ளை: 3 நேபாளிகள் கைது
சென்னை: சென்னை ஜெயின் கோவிலில் தலைமை பூசாரியை கொன்றுவிட்டு, ரூ. 2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் நேபாளத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை செளகார்பேட்டை தங்கசாலை தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சமீபத்தில் கொள்ளையர்கள் சிலர் புகுந்து தலைமை பூசாரி இம்மத்மால் என்பவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த 11 கிலோ எடை கொண்ட தங்க அங்கிகள் உள்ளிட்ட ரூ. 2 கோடி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடப்பதற்கு சில நாட்கள் முன்னர்தான் பகதூர் சிங் என்ற கோவில் காவலாளி தனது சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறிவிட்டு பிரேம் சிங் என்பவரை வேலையில் அமர்த்திவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் போலீசார் சென்னையை சேர்ந்த சுமார் 60 கூர்க்காக்களை பிடித்து விசாரித்தனர். மேலும் சோழிங்கநல்லூர் அருகே நாவலூர் என்ற இடத்தில் கூர்க்காக்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
அப்போது ராம்பகதூர் (30), அவரது மனைவி சீதா தேவி (25) ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் ஜெயின் கோவிலில் திருடப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்க அங்கி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்ப்டடது.
அங்கியை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது விசாரணை நடத்தினர். அப்போது பிரேம் சிங்கின் கூட்டாளி விஜய் சிங் என்பவர் தான் அந்த தங்க அங்கியை தங்களிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொன்னதாகக் கூறினர்.
தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்ட போலீசார் மந்தவெளியில இருக்கும் குடியிருப்பு ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்த விஜய் சிங்கை கைது செய்தனர். அவரிடம் இந்தக் கொள்ளையில் பிரேம் சிங் மற்றும் மற்ற கூட்டாளிகளின் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications