மெல்போர்னில் இன்னொரு இந்திய மாணவருக்கு கத்தி குத்து-குருத்வாரா சூறை
மெல்போர்ன: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்கிறது. நேற்றும ஒரு சீக்கிய மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். மற்றொரு இடத்தில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா சூறையாடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக இந்திய மாணவர்கள் மீது இனவெறி கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் பலரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் உறவினர் ஒருவர் இனவெறி காரணமாக கொல்லப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மெல்போர்னியில் நேற்று கிறிஸ்கொல்ம் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற நர்சிங் கல்லூரியில் படிக்கும் நர்தீப் சிங் என்ற 20 வயது சீக்கிய மாணவரிடம் வன்முறை கும்பல் ஒன்று சிகரெட் கேட்டுள்ளது. அப்போது நர்திப் தான் புகைபிடிப்பதில்லை என கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் சீக்கிய மாணவரிடம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அவர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த கும்பல் அவரை மார்பில் கத்தியால் குத்திவிட்டு ஓடியது. இதையடுத்து அவர் மெல்போர்ன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமிதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருத்வாரா சூறை...
நேற்று முன்தினம் மெல்போர்ன் நகரில் இருந்து 90 கிமீ வடக்கில் இருக்கும் ஷெப்பர்டன் என்ற நகரில் உள்ள குருத்வாரா ஒன்று வன்முறை கும்பலால் சூறையாடப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த கலை பொருட்கள், சுவர்களில் வரையப்பட்டிருந்த சுவஸ்திக் சின்னங்கள் அழிக்கப்ப்டடன. அதன் மீது முட்டைகளை வீசி தாக்கினர். மேலும் அந்த குருத்வாராவின் தடுப்பு கம்பிகளை காரால் மோதி உடைத்து, சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது.