For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதல்-பாக். தீவிரவாத தலைவர் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

லாகூர்: மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக இந்தியாவால் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச நெருக்கடிக்குப் பின் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜமாத்-உல்-தாவா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

இந்த வழக்கை பாகிஸ்தான் அரசு மெத்தனமாக நடத்தி அவரது விடுதலையை உறுதி செய்துள்ளது.

லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் இன்னொரு முகம் தான் ஜமாத்-உல்-தாவா. சமூக சேவை என்ற பெயரில் இளைஞர்களை மதவாத சக்திகளாக மாற்றி வரும் அமைப்பு இது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பைக்குள் கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல், மும்பை ரயில் நிலையம், டிரைடன்ட் ஹோட்டல் ஆகிய இடங்களில் நடத்திய தாக்குதலில் 160 பேர் பலியாயினர்.

தாக்குதலில் ஈடுபட்ட 13 தீவிரவாதிகளை ராணுவ கமாண்டோக்கள் சுட்டு வீழ்த்தினர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் அளித்த வாக்குமூலத்தில் லஸ்கர்-இ-தொய்பா தங்களுக்குப் பயிற்சி அளித்ததையும் ஹபீஸ் சயீதை தங்களிடையே உரையாற்றியதையும் தெரிவித்தான்.

இதையடுத்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜமாத்-உல்-தாவாவை ஐ.நா தடை செய்தது.

இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகமது சயீத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை பாகிஸ்தான் அரசு தீவிரமாக நடத்தவில்லை. சயீத் விடுவிக்கப்பட வேண்டும் என்ற தீவிரத்துடனேயே வழக்கை ஏனோதானோ என்று நடத்தியது.

அவர் மீது குற்றச்சாட்டுக்களுக்கு உரிய ஆதாரங்களையும் ஒப்படைக்காமல் அவருக்கு விடுதலை கிடைக்கத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தது.

இந்தியா கடும் கண்டனம்:

இதற்கிடையே ஹபீஸ் விடுதலை செய்யப்பட்டதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் ஒருபோதும் முழுமையான அக்கறை செலுத்தியது இல்லை. அதே நேரத்தில், சயீத்தின் விடுதலையால், இந்தியாவில் நடைபெறும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,

இந்த சம்பவம் மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதில் பாகிஸ்தான் அரசுக்கு உள்ள உண்மையான அக்கறையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதம் என்பது வெறுக்கத்தக்க செயல். இனி இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடருவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தானின் செயல் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் சக்திகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்களை இரண்டு ஆவண தொகுப்பு மூலம் பாகிஸ்தான் அரசுக்கு கொடுத்து இருக்கிறோம். ஆனால், அந்த நாட்டில் நடைபெற்ற விசாரணை குறித்து இதுவரை எந்த அறிக்கையையும் பாகிஸ்தான் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X