கருணாநிதி சாணக்கியனைவிட சிறந்தவர்-ஸ்டாலின்
சென்னை: அரசியல் சாதுரியத்தில் சாணக்கியனைவிட சிறந்தவர் கருணாநிதி என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
14 வயதில் பள்ளி மாணவனாக இருந்தபோது, இந்தித் திணிப்பை எதிர்த்து போராடியதன் மூலம் தனது பொதுவாழ்வை தொடங்கியவர் கருணாநிதி. இன்று பொதுவாழ்வில் அவர் 72 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.
1957ல் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல், இதுவரை ஒருமுறை கூட தோல்வியடையாதவர். சட்டப்பேரவைப் பணியிலும் 50 ஆண்டுகளைக் கடந்து, பொன்விழா கண்ட ஒரே இந்தியத் தலைவர்.
அவர் தமிழகத்தில் தீட்டிய பல திட்டங்கள், சாதனைகள்தான் இன்று இந்தியாவின் பல மாநில அரசுகளால் பின்பற்றப்படுகின்றன. அந்த சாதனைகளுக்குப் பரிசாக இந்தத் தேர்தலில் மக்கள் நமக்கு வெற்றியை அளித்துள்ளனர்.
இந்தியாவிலுள்ள பல கட்சிகளும் யார் ஆட்சி அமைப்பது, யார் பிரதமர் என்பதையெல்லாம் தேர்தலுக்குப் பிறகு கூறுகிறோம் என்றார்கள். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும், மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என உறுதிபடக் கூறிய ஒரே தலைவர் கருணாநிதிதான்.
அரசியலில் சிறந்தவர்களுக்கு சாணக்கியனை இலக்கணமாகக் கூறுவது வழக்கம். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இன்று அரசியல் சாதுர்யத்தில் கருணாநிதியைவிட சிறந்தவர், இந்தியாவில் யாருமே இல்லை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications