துப்பாக்கி சூடு-பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு: இந்திய பகுதிக்குள் ரோந்து செய்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த 2003 நவம்பரில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய பகுதிக்குள் இருக்கும் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வரை பாகிஸ்தான் இது போல் 30 முறை இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியில் இருக்கும் சவாஜியன் என்ற இடத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி எதுவும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிசூட்டில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து ராணுவ அதிகாரி பிரிகேடியர் குர்தீப் சிங் கூறுகையில், பாகிஸ்தான் படைகள் மூன்று அல்லது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டன. 4 முதல் 5 சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம் என்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்திய ராணுவம் விளக்கம் கேட்டு பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ உதவும் நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சில சமயம் இது போன்ற துப்பாக்கிசூட்டில் ஈடுபடுவார்கள். தற்போது அது போல் எதுவும் நடக்காமல் தடுக்க ராணுவம் அப்பகுதியில் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.