ஜூலை 3ல் மத்திய பட்ஜெட்!-வருமான வரி விலக்கு உயரும்?
டெல்லி: வரும் ஜூலை 3ம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதில் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு முன் ஜூன் 30ம் தேதி அல்லது ஜூலை 1ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங் அரசு இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்தது. இப்போது தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார்.
இதற்காக, ஜூன் மாத கடைசியில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இப்போது பட்ஜெட் தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரணாப் சில நாட்களாக தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த பட்ஜெட்டில், தேர்தலையொட்டி தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல சலுகைகளையும் பிரணாப் முகர்ஜி அறிவிப்பார் என்று தெரிகிறது.
குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு தற்போதைய ரூ.1 .5 லட்சமாக உள்ளது. இது ரூ.2 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு முன்பாக, ஜூன் 30ம் தேதி அல்லது ஜூலை 1ம் தேதியில் ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications