விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய மம்தா
டெல்லி: டெல்லியில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு தனது முக்கிய வேலைகளை கூட நிறுத்திவிட்டு, உடனடியாக முதலுதவி செய்து உதவினார் ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி. இதையடுத்து அவரது மனிதாபிமான செயலை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
டெல்லியின் பரபரப்பான விஜய் சவுக் பகுதியில் பைக்கில் சென்ற அருண் பிரகாஷ் என்பவர் மீது பின்னால் வந்த கார் ஒன்று லேசாக இடித்தது. இதில் அருண் பிரகாஷ் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார். அவருக்கு கை, கால்களில் லேசான ரத்த காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த பகுதி வழியாக வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அவருக்கு உடனடியாக உதவினார். எளிமையான தனேகாலி ரக பருத்தி சேலை அணிந்திருந்த அவர் அடிபட்டவருக்கு தண்ணீர் கொண்டு வந்து தரும்படி தனது உதவியாளரிடம் கூறினார்.
பின்னர் அவரை தனது உதவியாளரின் உதவியுடன் பிளாட்பாரத்துக்கு அழைத்து சென்றார். அந்த நபரின் காயத்தின் மீது தண்ணீரை ஊற்றி துடைத்தார். பின்னர் அவருக்கு தனது காரில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்த பேன்ட்-ஏய்டை போட்டுவிட்டார்.
அவரை பார்த்தவுடன் அப்பகுதியில் கூட்டம் கூடிவிட்டது. பத்திரிகையாளர்களும் அவரை சூழ துவங்கினர். இதையடுத்து அவர் தனது கார் பார்க்கிங் பகுதியில் நிற்பதால் உடனே செல்ல வேண்டும் எனக்கூறி அந்த இடத்தை காலி செய்தார்.
இது குறித்து காயமடைந்த அந்த நபர் கூறுகையில், மம்தா பானர்ஜி காரைவிட்டு இறங்கி வந்து உதவுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு உதவி செய்த அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரது மனிதாபிமான உள்ளம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.
உணவின் தரம் அதிகரிக்கப்படும்...
இந்நிலையில் ரயில் மற்றம் ரயில்வே நிலையங்களில் வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என்ற புகார் அடிக்கடி எழுந்து வருவதால் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே வாரியத்துக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில்,
உணவின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பயணிகளுக்கு தரமான உணவு கொடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ரயில்களில் தேசிய மற்றும் மாநில மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ற உணவுகள் இருக்க வேண்டும். பயணிகளுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் மம்தா பானர்ஜி.
போன் மூலம் உணவு ஆர்டர்...
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐஆர்சிடிசி) நிர்வாக இயக்குனர் ராகேஷ் டாண்டன் கூறுகையில்,
பயணிகள், போன் மூலம் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதற்கு அவர்கள் 139 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்யலாம். டிக்கெட் முன்பதிவு மையங்களில், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கூட அவர்கள் உணவுபொருட்களை ஆர்டர் செய்யலாம்.
தற்போது, சில சதாப்தி ரயில்களில் பயணிகளுக்கு டிராலிகளில் உணவு வழங்கப்படுகிறது. விரைவில் ராஜதானி எக்ஸ்பிரசிலும் டிராலிகளில் உணவு வழங்கப்படும் என்றார் அவர்.