எதிர்க்கட்சித் தலைவர் பதவி-அத்வானிக்கு பாஜகவில் எதிர்ப்பு
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என கூறி வந்தார் அத்வானி. இருப்பினும் கட்சியினரின் வலியுறுத்தல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் சமாதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து அதை ஏற்க ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து நாடாளுமன்ற பாஜக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந் நிலையில் அத்வானியை நாடாளுமன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவரான பியாரேலால் கந்தல்வால் அதிருப்தி தெரிவித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எந்தவித விவாதமும் இல்லாமல் அத்வானி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கந்தல்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவரை கட்சியின் மூத்த தலைவரும் அத்வானியின் எதிர்ப்பாளருமான முரளி மனோகர் ஜோஷி சந்தித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் அத்வானி சந்திப்பு..
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை அத்வானி சந்தித்துப் பேசினார். அவருடன், பாஜக தேர்தல் தோல்வி குறித்து அத்வானி விவாதித்துள்ளார்.
மேலும் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கும் பகவத்தை சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில், பாஜக தேர்தல் தோல்வி குறித்து ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான ஆர்கனைசரில் வெளியாகியுள்ள கருத்து பாஜகவில் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் என்பது வெளியில் செயலாற்ற வேண்டியது; குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் அல்ல. இதனால், பொதுமக்கள் மற்றும் பாஜக இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில், நிலையான மாற்று அரசு வழங்கும் கட்சியாக, தங்களை மக்கள் முன் எடுத்துக் காட்டுவதில் பா.ஜ.க, தோல்வியடைந்துவிட்டது.
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் தவறான நிர்வாகம் மற்றும் பலவீனமான ஒருங்கிணைப்பு போன்றவையே இந்த தோல்விக்கு காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்துக்களைக் கவராத அத்வானி..
இதற்கிடையே, அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பாஜக செய்த பிரசாரம் இந்துக்களை கவரவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அத்வானியால் இந்துக்களைக் கவர டியவில்லை. இதுகுறித்து நான் மோகன் பகவத்துடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளேன்.
பாஜகவின் முக்கிய கொள்கையே ராமர் கோவில் கட்டுவது, 370வது அரசியல் சட்டப் பிரிவை நீக்குவது, பொது அரசியல் சாசனத்தை உருவாக்குவது என்பதுதான். இந்த மூன்றை விட்டும் பாஜகவும், அத்வானியும் விலகிப் போய் விட்டார்கள். இதுதான் தேர்தலில் பாஜக சந்தித்த மிகப் பெரிய தோல்விக்கு முக்கிய காரணம்.
பாஜகவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆர்.எஸ். எஸ். முன்வர வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கடமையாகும்.
இந்து தேசியவாதத்தை பாஜக பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அது சங் பரிவார் கட்சியாக நீடிக்க முடியாது. யாரோ ஒருவரின் கட்சியாக மாறிப் போய் விடும்.
ராமர் கோவில் மட்டுமே பாஜகவின் திட்டம், அரசியல் லாபத்திற்காகவே அது அவ்வாறு பேசுகிறது என்று மக்கள் நினைத்தால் நினைத்து விட்டுப் போகட்டும். இந்த நாட்டின் முக்கிய மக்கள் இந்துக்கள்தான். எனவே அவர்களைப் பற்றி மட்டும்தான் பாஜக கவலைப்பட வேண்டும்.
இந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார் வைத்யா.