கோவை பெண் டாக்டருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை
கோவை: கோயம்புத்தூரில் அரசு மருத்துவமனையில் ஸ்வைன் ப்ளூ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கும் அவரது ஐந்து வயது மகனுக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சமீபத்தில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளித்த 24 வயதான குஜராத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூவுக்கான அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பரிசோதனைக்கு பின் அவரது சோதனை முடிவும் தெரிய வந்துள்ளது. அதில் அந்த பெண் டாக்டருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இரண்டு நாள் கூடுதல் சிகிக்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.
இந்நிலையில் பன்றி காய்ச்சல் இருப்பதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஊட்டியை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 9 வயது மகன் ஆகிய மூன்று பேரின் பரிசோதனை முடிவும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரன் கூறுகையில்,
கோவை மருத்துவமனையி்ல் ஸ்வைன் ப்ளூ காரணமாக தற்போது 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
ஸ்வைன் ப்ளூ நோயாளிகள் இருப்பதால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் மற்ற நோயாளிகள் யாரும் பயப்பட தேவையில்லை. அவர்கள் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண இருமல், சளி காய்ச்சல் இருப்பவர்கள் உடனே சோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.