For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி வருவாயில் தமிழகத்துக்கு 50% தர வேண்டும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் இருந்து பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீதத்தைத் தர வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய-மாநில அரசுகளுக்கிடையே நிதி பகிர்வை வரையறுக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய நிதிக் கமிஷன் தற்போது மாநிலவாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி வருகிறது.

நிதிக் கமிஷனின் தலைவர் விஜய் கேல்கர், உறுப்பினர்கள் சஞ்சீவ் மிஸ்ரா, இந்திரா ராஜாராமன் மற்றும் அதிகாரிகள் குழு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன், நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.

இக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,

ஏழை மக்களின் மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு மாநில அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நலத் துறை மற்றும் உள் கட்டமைப்புக்கு தமிழகம் முக்கியத்துவம் தருகிறது.

இந்தியாவிலேயே சிறந்த சமூக பாதுகாப்பு திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. அது போன்ற முயற்சிகளுக்கு பெருமளவில் நிதி செலவாகிறது.

நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. இந் நிலையில், மக்களின் நலனை முன்வைத்து சில திட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கும்போது பொருளாதார ரீதியில் மாநில அரசு சிரமங்களை சந்திக்க நேருகிறது.

மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், மத்திய அரசுத் துறைகளின் வரி வருவாயை பகிர்ந்த அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு பல்வேறு வகைகளில் கிடைக்கும் மொத்த வரி வருவாயில் இருந்து 50 சதவீதத்தை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும்.

வேண்டுமானால் மாநிலங்களுக்குத் தரும் மானியங்களை குறைத்துக் கொள்ளலாம். பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய நிதிக் குழு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், தமிழகத்தைப் போல சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்கு 7.9 சதவீதம் நிதி கிடைத்து வந்தது. இப்போது இது 5.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. எனவே தமிழக அரசு அளித்துள்ள புதிய பார்முலா' அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.

அதே போல புயல், வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் காலங்களில் ஏற்படும் சேதங்களை சரிக்கட்ட மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியையும் அதிகரிக்க வேண்டும். வெள்ளம் ஏற்படும்போது, பயிர்களுடன் வீடுகளும் சேதமடைகின்றன. இதற்கான நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும். சாலைப் பணிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கி தர வேண்டும்.

எங்களது கருத்துக்கள், கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறேன். நீங்களும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, எங்களது அரசின் சாதனைதளையும் ஆய்வு செய்து நிதிப் பங்கீடு அளிப்பதில் நியாயமான நடைமுறையை பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X