மக்களை அழித்து கொண்டாடும் இலங்கை-பாஜக
சென்னை: சொந்த நாட்டு மக்களையே அழித்து வெற்றி விழா கொண்டாடும் ஒரே அரசு இலங்கை அரசு தான். அங்கிருக்கும் அகதிகள் முகாம் சித்திரவதை முகாம் போல செயல்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒடுக்கி விட்டதாக வெற்றி விழா கொண்டாடி வரும் இலங்கை அரசு இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை வெளிஉலகிற்கு தெரியாமல் மறைத்துவிட்டது.
தன் சொந்த நாட்டு மக்களையே அழித்து வெற்றி விழா கொண்டாடும் ஒரே அரசு இலங்கை அரசு தான். வெள்ளைக்கொடி ஏந்தி வந்த சிலரையும் உலக போர் நியதிகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது. இது தொடர்பாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய இந்திய அரசு மவுனம் சாதிப்பது வியப்பளிக்கிறது.
வாக்களிப்பதை தவிர்ததிருக்கலாம்...
இலங்கை அரசின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்த போது இந்திய அரசு வாக்களிப்பதை தவிர்த்திருக்கலாம், மாறாக இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.
இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு வழங்குவதாக கூறியுள்ள ரூ. 500 கோடி நிதியுதவி, உண்மையில் அவர்களுக்கு போய் சேருமா என்பது சந்தேகமே. எவ்வித நிபந்தனையுமின்றி இலங்கைக்கு உதவி செய்து வரும் இந்தியா இனியாவது அவர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கலாம்.
அகதிகள் முகாம் சித்திரவதை முகாம் போல செயல்படுகிறது. இதை மாற்ற வேண்டும். தமிழர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் தாமதமின்றி வழங்க வற்புறுத்த வேண்டும். தகர்க்கப்பட்டுள்ள கிராமங்கள், நகரங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஆலயங்களை புனர் நிர்மாணம் செய்ய வற்புறுத்த வேண்டும்.
இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்...
யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆகியோர் குறித்து நிபுணர் குழு தந்த பரிந்துரையை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.
இனியாவது இந்திய அரசு இதைச் செய்யுமா? அதை தி.மு.க. அரசு வற்புறுத்துமா? என்பதே இன்றைய கேள்வி என அந்த அறிக்கையில் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.