பைப் வெடிகுண்டு-தூத்துக்குடியில் 2 பேர் காயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பைப் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே மங்களகிரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சுதாகர். இவர் தனது நண்பர்கள் தங்கமாரியப்பன், சதீஷ்குமார் ஆகியோருடன் நேற்று காலை தூத்துக்குடி கால்டுவேல் காலனியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் மாலையில் தங்களது கிராமத்தில் நடக்கவிருக்கும் அந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மதியம் ஊர் திரும்பினர். பிற்பகல் 3 மணிக்கு அவர்கள் அங்குள்ள குளத்து பகுதிக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் அங்கு ஒரு இரும்பு பைப் ஒன்று கிழே கிடந்ததை பார்த்துள்ளனர். அது என்னவென்று அறிந்து கொள்வதற்காக தங்க மாரியப்பன் அதை கையில் எடுத்து பார்த்த போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் தங்கமாரியப்பன் மற்றும் சுதாகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சதீஷ்குமார் காயமின்றி தப்பினார். தகவல் அறிந்த டிஎஸ்பி தீபக் டமோர், தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு வெடிக்காமல் கிடந்த மற்றொரு பைப் வெடிகுண்டை கண்டுபிடித்து, வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் அதை செயலிழக்க செய்தனர்.
மேலும் மோப்ப நாய் லிம்கா மூலம் அப்பகுதியில் வேறு எங்கும் வெடிகுண்டுகள் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.