கோவையில் டிரைவர்-வாலிபர் மோதல்: நிறுத்தப்பட்ட பஸ்கள்
கோவை: கோவையில் பஸ் டிரைவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையை மோதல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
கோவை உக்கடம் அரசு போக்குவரத்து கழக, திமுகவை சேர்ந்த தொழிற்சங்க தலைவராக இருப்பவர் பொன்ராஜ் (47). இவர் உக்கடம் டெப்போ 2ல் பணியாற்றி வருகிறார்.
நேற்று மதியம் டெப்போவில் வண்டியை நிறுத்திவிட்டு எதிரில் இருக்கும் கடைக்கு சென்று டீ சாப்பி்ட்டுவிட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் ரோட்டை கடக்கும் போது அந்த பகுதியாக பைக்கில் வந்த ஹக்கீம் என்பவர் அவர் மீது மோதினார்.
இதில் பொன்ராஜ் கையில் அடிபட்டது. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. தங்கள் சக ஊழியர் ஒருவரை யாரே ஒரு நபர் அடிப்பதை பார்த்த 30க்கும் மேற்பட்ட அரசு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஹக்கீமை தூக்கி சென்று அடித்து உதைத்துள்ளனர்.
ஹக்கீம் தாக்கப்பட்ட செய்தி அவரது கடை இருக்கும் உக்கடம் பழைய மார்க்கெட் பகுதிக்கு பரவ, அங்கிருந்து சுமார் 300 பேர் பஸ் டெப்போ முன் திரண்டனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
உடனடியாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
மோதலில் காயமடைந்த டிரைவர் பொன்ராஜ் மற்றும் ஹக்கீம் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஹக்கீமை தாக்கிய அரசு பஸ் டிரைவரை கைது செய்ய வேண்டும் என உக்கடம் பழைய மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பஸ்கள் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் பஸ் இயக்கப்பட்டன.
இது தொடர்பாக பஸ் டிரைவர் மீது ஹக்கீமும், ஹக்கீம் மீது பஸ் டிரைவரும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications