யுஎஸ் ராணுவத்தில் சீக்கியர்கள்-பென்டகன் பரிசீலனை
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்களையும் சேர்ப்பதற்காக தற்போது உள்ள கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து ராணுவத் தலைமையகமான பென்டகன் பரிசீலனை செய்து வருகிறது.
அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வரும் சீக்கியர்கள், தங்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் தற்போது சீக்கியர்களை ராணுவத்தில் சேர்க்க அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்கையில் இடமில்லை.
இந்த நிலையில் சீக்கியர்களையும் ராணுவத்தில் சேர்க்க வசதியாக கொள்கையில், திருத்தம் கொண்டு வர பென்டகன் யோசித்து வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் சார்பாக, பென்டகனின் கொள்கை வகுப்புப் பிரிவு இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜான் ஹாக்கின்ஸ் கூறுகையில், அமெரிக்க சீக்கிய குடிமக்களையும் ராணுவத்தில் சேர்ப்பது குறித்து தற்போது உள்ள கொள்கையில் திருத்தம் கொண்டு வருவது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
சீக்கியர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகைதான் (டர்பன்) அவர்களை ராணுவத்தில் சேர்க்க தடையாக உள்ள விஷயம்.
அதுகுறித்து தற்போது பரிசீலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தினரின் எதிர்பார்ப்பு மற்றும் கவலைகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் அவர்.
பென்டகனின் இந்த கருத்துக்கு சீக்கிய சமுதாயத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீக்கிய கூட்டணி என்ற அமைப்பின் செயல் இயக்குநர் அமர்தீப் சிங் கூறுகையில், ராணுவம் தனது கொள்கையை பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் சீக்கியர்களுக்கும் ராணுவத்தில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் எந்த ராணுவத்திலும் இணைந்து பணியாற்றும் தகுதி படைத்தவர்கள் சீக்கியர்கள் என்ற பெருமையும் இதன் மூலம் கிடைக்கும் என்றார்.