For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் விமான விபத்து: 2 உடல்கள் கிடைத்துள்ளது - பிரேசில்

By Staff
Google Oneindia Tamil News

ரியோ டி ஜெனிரோ: 228 பேருடன் காணாமல் போன பிரான்ஸ் விமானம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த கடல் பகுதியில் இருந்து 2 ஆண்களின் உடல் மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை மீட்டு இருப்பதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இருந்து பாரிசுக்கு சுமார் 216 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சென்ற விமானம் கடந்த வாரம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சமயத்தில் காணாமல் போனது.

இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளின் போர் விமானங்கள் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. எல்லாம் சிதம்பர ரகசியமாக இருக்கிறது. முதலில் மோசமான வானிலை காரணமாக அது மின்னல் தாக்கி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் திசைகாட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்பட்டது.

வேகம் காட்டும் கருவியை விமானிகள் தவறாக கையாண்டிருக்கலாம். அதனால் அதிவேகத்தில் சென்று விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. அனைத்தும் யூகங்களாக தான் இருக்கின்றன. உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கடலில் விமானத்தின் இருக்கை கிடப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது அந்த விமானத்தின் இருக்கை அல்ல என்பதை பிரேசில் உறுதி செய்தது.

தற்போது விபத்து நடந்ததாக கருதப்படும் பகுதியில் பிரேசில் விமானப்படை மீட்புகுழவினர் இரண்டு ஆண் சடலங்களை கண்டு எடுத்துள்ளனர். இது குறித்து பிரேசில் விமான படையின் செய்தி தொடர்பாளர் கர்னல் ஜார்ஜ் அமரல் கூறுகையில், அந்த உடல்களுக்கு அருகில் ஒரு சூட்கேஸ், விமான டிக்கெட், லேப்-டாப் அடங்கிய பை ஆகியவை கிடைத்துள்ளன.

பெர்னாண்டோ டி நொரங்கா தீவில் இருந்து சுமார் 900 கிலோ மீட்டர் வடகிழக்கே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

தீவிரவாத தாக்குதல்...

இந் நிலையில் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் எனவும் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் காணாமல் போன சமயத்தில் அப்பகுதியாக வந்த மற்றொரு விமானத்தின் விமானி வானத்தில் ஒரு விமானம் வெடித்து சிதறுவதை பார்த்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து விமானம் வெடிகுண்டு போன்றவற்றால் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதை பென்டகன், பிரான்ஸ் மற்றும் பிரேசில் மறுத்து விட்டன.

இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்சனர் கூறுகையில், தீவிரவாதம் காரணம் என்பதை ஏற்க முடியாது என்றார்.

அமெரிக்கா உதவும்-ஒபாமா...

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விபத்து தொடர்பாக தேடும் பணியில் அமெரிக்கா உதவும் என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியிடம் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போன அட்லாண்டிக் கடல் பகுதியின் ஆழம் சுமார் 15 ஆயிரம் அடிக்கு மேல் இருப்பதால் பிரான்ஸ் தேடுதல் வேட்டைக்கு நீர் மூழ்கி கப்பலை பயன்படுத்த இருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X