வெண்பட்டு உற்பத்தி-தமிழகம் முதலிடம்
நாமக்கல்: வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதாகத் பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் ஹர்மந்தர்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவிலேயே வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஆண்டு 10 ஆயிரம் டன் பட்டுக்கூடும், 1400 மெட்ரிக் டன் பட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் வெண்பட்டு மட்டும் 377 மெட்ரிக் டன்னாகும்.
தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் ஏக்கரில் பட்டு வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. இத் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டு விவசாயிகளுக்கு அரசின் சலுகைகள் விரைந்து வழங்க கிளஸ்ட் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அமைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இடம் பெறுவார்கள்.
உடுமலைப்பேட்டை, பழனி, பேரிகை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 4 இடங்களில் கிளஸ்டர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டு தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை லாபம் பெற முடியும்.
பட்டு வளர்ப்பிற்கு மத்திய-மாநில பட்டுவாரியங்களின் மூலம் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. ரூ.3.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் மையங்களுக்கு ரூ.1.70 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
சேலத்தில் ரூ.2 கோடி மதிப்பில் தானியங்கி பட்டு நூற்பாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் தானியங்கி நூற்பாலை தொடங்கப்படும் என்றார்.