பிறந்த நாள் கலை நிகழ்ச்சிகள் - ரசித்துப் பார்த்தார் கருணாநிதி
சென்னை: தனது 86வது பிறந்த நாளையொட்டி திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.
கலைவாணர் அரங்கில் நடந்த இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு திமுகவின் ஆதி திராவிட நலக்குழு, விவசாய அணி, மீனவர் அணி ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
கலைஞர் போற்றுதும்... கலைஞர் போற்றுதும்...
கலைஞர் போற்றுதும்... கலைஞர் போற்றுதும் என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சிளை சுமார் ஒரு மணஇ நேரம் முதல்வர் கருணாநிதி அமர்ந்து பார்த்து, ரசித்து, மகிழ்ந்தார்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அமைச்சர்கள், தி.மு.க. மகளிர் அணி புரவலர் இந்திர குமாரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதலில் தப்பாட்டம்...
திண்டுக்கல் எஸ்.பி.மணி குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
படவா கோபி காமெடி...
நிகழ்ச்சியின் இடை இடையே படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாட மயிலாட...
பின்னர் முக்கிய நிகழ்ச்சியாக பராசக்தி படத்தின் ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு கலைஞர் டிவியின் மானாட மயிலாட குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியாக, மானாட மயிலாட குழுவினர் ஏற்பாடு செய்து இருந்த கருணாநிதியின் 86-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, பிறந்தநாள் கேக்' வெட்டினார்.
தொகுத்து வழங்கிய மனோரமா...
நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் கவியின் இசையில் பாடப்பட்ட பராசக்தி பாடல் சி.டி. வெளியிடப்பட்டது. சி.டி.யை மு.க.ஸ்டாலின் வெளியிட, ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நேற்றைய நிகழ்ச்சிகளை நடிகை மனோரமா தொகுத்து வழங்கினார்.