ஈழத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம்-லோக்சபாவில் திருமா

முதல் முறையாக லோக்சபா உறுப்பினராகியுள்ள திருமாவளவன், லோக்சபாவில் தனது கன்னிப் பேச்சைப் பதிவு செய்தார்.
திருமா பேசுகையில், தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களை மக்களவையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பாராட்டுகிறேன். இக்கால கட்டத்தை எளியோரின் காலம் என கூற விரும்புகிறேன்.
குடியரசுத் தலைவர் உரையில் பெண் கல்விக்கான தேசிய இயக்கம், அடையாள அட்டை வழங்கும் திட்டம், குப்பம் இல்லா இந்தியா, தேசிய அளவிலான உணவு உறுதிச்சட்டம், சிறுபான்மை யினருக்கான பிரதமரின் 15 அம்சத்திட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியவை.
ஆனால், ஜனாதிபதியின் உரையில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை பற்றியும், சேது சமுத்திரத் திட்டம், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை தமிழர் மீதான இனப் படுகொலை பற்றி இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
எனது கட்சியும், தோழமைக் கட்சியான திமுகவும், ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக் கொண்டு தமிழ்ச் சொந்தங்களை பாதுகாக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications