சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்-அழகிரி
மேலூர்: தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
மத்திய உர மற்றும் ரசாயன துறை அமைச்சராகியுள்ள அழகிரி தான் வென்ற மதுரை தொகுதி வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
கிடாரிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, மேலூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் பேசுகையில்,
மேலூரில் நீண்ட நாட்களாக நூற்பாலை மூடப்பட்டுள்ளது. அதை திறக்க முயற்சி செய்வேன். இல்லையென்றால் புதிய தொழிற்சாலையை துவக்குவேன்.
மேலூர் தொகுதியில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்றை திறந்து. அதில் ஒரு உதவியாளரை நியமிப்பேன். பொதுமக்கள் அந்த அலுவலகத்தில் தாராளமாக சென்று மனு கொடுக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் சமயத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார் அழகிரி.
இன்று கொட்டாம்பட்டி யூனியன் பகுதியில் இருக்கும் எட்டிமங்கலம், மேலவளவு, ஆலம்பட்டி, பட்டூர், கேசம்பட்டி, சாணிப்பட்டி, சேக்கிப்பட்டி, அட்டப்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று நன்றி தெரிவிக்கிறார்.