கடல் கொந்தளிப்பு-முள்ளாய் குத்தும் மீன் விலை!

கடந்த வாரம்தான், 45 நாள் மீன் பிடி தடை நீங்கியது. இதையடுத்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள். ஆனால் கடலில் ஏற்பட்ட தொடர் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மீன்கள் போதிய அளவில் வரத்து இல்லை. மேலும், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மீன் பிடி தடை காரணமாக ஏற்கனவே மீன் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. தடை நீங்கிய நிலையில், கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட சூழ்நிலையில் மீன் விலை இன்னும் இறங்காமல் அப்படியே நிற்கிறது.
சென்னை நகர மீன் கடைகளில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ. 530க்கு விற்கிறது. இதனால் வஞ்சிரம் பக்கம் போகவே மக்கள் அஞ்சுகிறார்கள்.
எந்த மீனும் கிலோ ரூ. 100க்குக் குறையாமல் விற்கிறது. இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள்.
தமிழகத்தில் மீன் பிடி தடை நீங்கிய நிலையில் அடுத்து கேரள கடற்கரை உள்ள மேற்கு கடலோரப் பகுதியில் ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி மீன் பிடி தடை அமலாகவுள்ளது.
எனவே சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கிடைக்கும் நல்ல நல்ல மீன்களை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடும் நிலை உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, காசிமேடு, தூத்துக்குடி, சின்ன முட்டம், பாலையார் ஆகிய இடங்களில்தான் அதிக அளவில் மீன் பிடி நடைபெறுகிறது. இங்கு மட்டும் கடந்த 10 மாதங்களில் 1300 டன் மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
பெரிய விசைபடகுகளில் மீன் பிடிக்கச்செல்லுபவர்களுக்கு வழக்கமாக 2 முதல் 3 டன் வரை மீன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பிய பெரிய விசைபடகு மீனவர்களுக்கு 200 கிலோ மீன்கள் கூட கிடைக்கவில்லை.
தமிழக கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான சூறாவளி காற்று வீசுவது மட்டும் அல்லாமல் கடலின் உள்பகுதியில் சுழற்சியும் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் பெரிய வலைகளை வீசும்போது அந்த வலைகள் அப்படியே சுருண்டுவிடுகிறது. இதனால் பெரிய மீன்கள் எதுவும் வலையில் சிக்குவது இல்லை.
சங்கரா, மத்தி, நெத்திலி போன்ற சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைக்கிறது.
விலை அதிகம் உள்ள வஞ்சிரம், கறுப்பு வாவல், சுறா, இறால், கொடுவா ஆகிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் கண்ணீர் மல்க கரை திரும்புகின்றனர்.
காசிமேடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களுக்கு எதிர்பார்த்தபடி மீன்கள் கிடைக்கவில்லை.
ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடல் உள்வாங்கியபோது படகுகள் சேதம் அடைந்துவிட்டன. இதனால் இந்த பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன் விலை கடுமையாக உள்ளதே என்று மக்கள் கவலையுடன் இருக்க, மீன் கிடைக்காமல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications