திருப்பரங்குன்றம் மலையிலிருந்து விழுந்து 2 நாட்களாக புல்லைத் தின்று மீண்டவர்!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குன்றிலிருந்து விழுந்த இளைஞர், தப்பிக்க வழி இல்லாமல், 2 நாட்களாக புல்லையும், இலைகளையும் சாப்பிட்டு பத்திரமாக மீண்டு வந்துள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 30 வயதாகும் இவர் திருப்பரங்குன்றத்தி்ல் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.
சனிக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு திருப்பரங்குன்றம் மலையில் ஏறினார். மலைப் பகுதியில் உள்ள முஸ்லீம் தர்கா, காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் கீழே இறங்கினார்.
அப்போது திடீரென கால் தடுமாறி 200 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார்.
அதிர்ஷ்டவசமாக கை, கால்களில் முறிவோடு உயிர் தப்பினார். ஆனால் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். உதவி கேட்டு குரல் எழுப்பியும் அது பலன் அற்றுப் போனது.
கை, கால்களில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தோடு, அங்கியே 2 நாட்களாக கிடந்தார் செந்தில்குமார். பசியைப் போக்க அங்கிருந்த இலைகளையும், புல்லையும் பறித்து சாப்பிட்டுள்ளார்.
முனகியபடி கிடந்த அவரது குரல், தர்காவுக்கு வந்த சிலரது காதுகளுக்கு எட்டியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து செந்தில்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.