ராகுலிடம் உதவி நாடி வந்த கலாவதியை திருப்பிய அனுப்பிய காங். நிர்வாகிகள்

லோக்சபாவில் கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தின்போது ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த தலித் விதவைப் பெண்ணான கலாவதி குறித்து அவர் குறிப்பிட்டுப் பேசியது அனைவரையும் ஈர்த்தது, பலத்த கரகோஷத்தையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும் பலத்தைப் பெற்றுத் தந்தது ராகுலின் கலாவதி பேச்சு.
கலாவதி, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த தலித் பெண். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 9 குழந்தைகள் உள்ளன.
2008ம் ஆண்டு ராகுல் காந்தி கலாவதியின் கிராமத்திற்குப் பயணம் மேற்கொண்டார். கலாவதியின் குடிசையில் தங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது கதையைக் கேட்டு கண் கலங்கினார்.
கிராமத்தில் சுகாதார வசதி இல்லாமல் இருப்பதையும், கலாவதிக்கு சொந்தமாக வீடு கூட இல்லாத நிலை இருப்பதையும் தெரிந்து கொண்டார். இதைத்தான் தனது லோக்சபா பேச்சின்போது அனல் பறக்கக் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியால் கலாவதியின் பெயர் நாடு முழுக்க பிரபலமானாலும் கூட அவரது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அதே போலத்தான் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அவரது ஊர் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியை சந்தித்து உதவி கேள் என்று கூறவே டெல்லிக்கு புறப்பட்டு வந்தார் கலாவதி.
நேற்று ராகுல் காந்தியை சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் ராகுல் பிசியாக இருப்பதாக கூறி அனுமதி தர முடியாது என்று அவரது அலுவலக நிர்வாகிகள் கூறி விட்டனராம்.
இதுகுறித்து கலாவதி கூறுகையில், எனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், அமையும் என ராகுல் காந்தி உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவருக்கு நினைவூட்டவே டெல்லிக்கு வந்தேன்.
இன்னும் எனது கிராமத்தில் அதே நிலைதான் தொடருகிறது. எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என்றார் சோகத்துடன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தனது தேர்தல் பிரசாரத்தின்போது புதிய இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்ற கோஷத்தை பெரிதாக முழங்கியது. இப்போது அதை கலாவதிக்கு புது வீடு கட்டிக் கொடுத்து அவருக்குப் புது வாழ்க்கை கொடுப்பதன் மூலம் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கலாம்.












Click it and Unblock the Notifications