ராகிங் கொடுமை-ஆந்திர மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை
வாராங்கல்: ஆந்திராவில் ராகிங் கொடுமை காரணமாக எம்சிஏ மாணவர் ஒருவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராகிங் கொடூரம் மீண்டும் தலையெடுக்க துவங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ராகிங் காரணமாக ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அமன் கச்ரூ என்ற மாணவர் பலியானார்.
ஆந்திராவில் சீனியர் மாணவிகள் நிர்வாண நடனம் ஆடச் சொன்ன காரணத்துக்காக ஒரு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டார் என ராகிங் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் ராகிங் கொடுமைகளை தடுக்க மாநில அரசுகள் கமிட்டி ஒன்றை அமைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள வாசவி என்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்சிஏ படித்து வந்த தேவந்தர் குமார் என்ற 22 வயது மாணவன் ராகிங் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
தனது சொந்த ஊரான கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சோபாதண்டி கிராமத்தில் இருந்து செமஸ்டர் தேர்வு எழுத ஹைதராபாத் சென்று கொண்டிருந்த அவர் கல்லூரிக்கு சென்றால் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வார்கள் என பயந்து போனார்.
இதையடுத்து அவர் வாரங்கால் மாவட்டம் தர்மராம் என்ற கிராமத்துக்கு அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலை குறித்து அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், கல்லூரியில் சீனியர் மாணவர்களின் ராகிங் கொடுமை தாங்கமுடியவில்லை. எனக்கு அங்கிருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இது குறித்து அந்த மாணவரின் தந்தை சங்கரய்யா கூறுகையில், எனது மகன் கல்லூரியில் ராகிங் இருப்பதாக என்னிடம் கூறி வந்தான். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications