சாமியுடன் இணைந்து செயல்பட பாஜக முடிவு!
சென்னை: தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு புதுக் கூட்டணி உருவாகியுள்ளது. பாஜகவும், சுப்ரமணியம் சாமியின் ஜனதாக் கட்சியும் இணைந்து செயல்படப் போகிறதாம்.
இன்று சென்னையில் பாஜக தலைவர் இல.கணேசனும், சாமியும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கணேசன் கூறுகையில், விடுதலைப்புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் மீண்டும் வசித்த பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். மத்திய அரசே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையை பெற்றுத்தர வேண்டும். இலங்கை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தவும், புத்த மடாலயங்களை எழுப்பவும் சிங்கள அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுவதை கண்டிக்கிறோம்.
தமிழர்கள் அந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். இதை பிஜேபியை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கை சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று அத்வானியிடம் கூறவிருக்கிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்க வேண்டும்.
சித்தாந்த ரீதியாக ஒரே கொள்கைகளை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம்தான் உள்ளது என்பதை நிருபித்து காட்டுவதற்காக பிஜேபியும், ஜனதா கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
தேசிய தன்மை நல்லாட்சி, இந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, தேச பாதுகாப்பு போன்ற விஷயங்களில் ஒருமித்த கருத்துகொண்ட பிஜேபியும், ஜனதா கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்கைகளை கொண்ட சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இரு கட்சிகளும் ஈடுபடும்.
இப்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, ஒற்றுமைக்காக இந்து மதத்தில் மறுமலர்ச்சி கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் வேறு சில கட்சிகள் வந்தால் அவற்றை வரவேற்போம் என்றார்.