'இலங்கையில் நடந்தது சுத்தமான இனப்படுகொலை'-பாயில்
சென்னை: இலங்கையில் அந்த நாட்டு அரசும், ராணுவமும் திட்டமிட்ட இனப்படுகொலையை மிகச் சரியாக திட்டமிட்டு நடத்தி முடித்துள்ளன என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் கூறியுள்ளார்.
சென்னையில் பன்னாட்டுத் தமிழர் மையம் சார்பில் இலங்தை தமிழர் புனர்வாழ்வு என்ற தலைப்பில் நடந்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார் பாயில்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழர்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலின் வாயிலாகவும், அவர்களை பட்டினிப் போட்டுக் கொல்வதன் மூலமும், நோயை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியும், அளவிற்கு அதிகமான மக்களை முகாம்களில் முடக்கி வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை போதுமான அளவிற்கு அளிக்காமலும் ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது.
இலங்கை அரசு தனது முப்படைகளையும் கொண்டு நடத்திய படுகொலை, ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட 1948ஆம் ஆண்டின் இனப் படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை விதி 2 ன் கீழ் திட்டமிட்ட இனப் படுகொலையே. இதன் அடிப்படையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் அந்நாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.
போஸ்னியாவின் செரபனிகாவில் செர்பிய படைகள் நடத்திய தாக்குதலில் 8,000 அல்பேனிய இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். அதனை ஐ.நா.வும் மேற்கத்திய நாடுகளும் இனப் படுகொலை என்று ஒப்புக் கொண்டன.
அதனைப் போன்று 6 மடங்கு அப்பாவித் தமிழர்களை கடந்த ஜனவரியில் இருந்து 5 மாதத்தில் கொன்று குவித்துள்ளது இலங்கை அரசு. ஆனால் அதனை ஐ.நா.வோ அல்லது மேற்கத்தைய நாடுகளோ இனப் படுகொலை என்று கூறாதது ஏன்?.
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலை தொடர்வதையே முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த 13,000 பேருக்கு மேல் காணாமல் போயிருப்பது காட்டுகிறது. இது மானுடத்திற்கு எதிரான குற்றமாகும்.
ஏறக்குறைய 3 லட்சம் பேரை அடிப்படைத் தேவைகள் அளிக்காமல் முகாம்களில் அடைத்து வைத்திருப்பது அவர்களையும் அழித்துவிட வேண்டும் என்ற திட்டத்தில்தான்.
இலங்கை அரசினால் கடந்த 60 ஆண்டுகளாக இன வேற்றுமைக்கும், படுகொலைக்கும் உட்படுத்தப்பட்டு வரும் தமிழர்கள், அந்நாட்டில் இருந்த பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமைக்குத் தகுதியானவர்களே. ஐ.நா. சபை ஏற்றுக் கொண்ட சுய நிர்ணய உரிமை தொடர்பான ஒப்புதல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கை அரசினால் வேறுபட்ட மக்களாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள், அந்நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டும் வருகிறார்கள். அதன் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் தனி அடையாளங்களை அந்நாட்டு அரசு அழித்து வருகிறது. அவர்களின் சமூக, அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் தமிழர்கள் தங்கள் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களுடைய இன அடையாளங்களை காத்துக் கொள்ளவும், தங்களுக்குள்ள சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தனி நாட்டை பிரகடனம் செய்ய முடியும்.
அமைதி பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் இலங்கை அரசமைப்பை கூட்டாட்சி ஆக்க அந்நாடு ஒப்புக் கொள்ளாத நிலையில் ஒரு சுதந்திர அரசை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.
செர்பியாவின் ஆதிக்கத்திலிருந்தும், இன ஒடுக்கலில் இருந்தும் பிரிந்து சென்று பிரகடனம் செய்யப்பட்ட கொசோவோவிற்கு எந்தெந்த சர்வதேச சட்டங்கள் பொருந்தினவோ அவையனைத்தும் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்றார் பாயில்.












Click it and Unblock the Notifications