'கள்' இறக்கி கைதானவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை-போலீஸ் மீது புகார்
கோவை: 'கள்' இறக்கிய காரணத்துக்காக கைதான விவசாயிகளை போலீசார் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக் 'கள்' இறங்குவதை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக அரசு, சமீபத்தில் 'கள்' இறக்க அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து தென்னை விவசாயிகள் தமிழகம் முழுவதும் 'கள்' இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி பலரையும் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 184 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் சிலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவகிரிபுதூர் முனியப்பன் கோவில் தோட்டத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் மற்றும் கண்ணுசாமி ஆகியோர் மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் வந்ததால் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பதட்டம் ஏற்படட்து.
அந்த மனுவில்,
காங்கேயம் போலீசார் கடந்த 6ம் தேதி 'கள்' இறக்கியதாக கூறி எங்களை கைது செய்து, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் எங்களையும் சேர்த்து 5 பேரை காங்கேயம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு பின்னர் எங்களை மீண்டும் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் எங்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினர். எங்கள் இருவரையும் இரவு 9 மணிக்கு ஓய்வு அறையில் நிர்வாணமாக்கி அந்த அறையை சுற்றி ஓட வைத்து, சித்ரவதை செய்தனர்.
பின்னர் எங்களிடம் உங்களுக்கு ஜாமீன் கிடைத்ததால் விட்டுவிடுகிறோம். இல்லை என்றால் உங்களை மேலும் சித்ரவதை செய்திருப்போம் என கூறினர். எங்களை போலீசார் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த போது அருகில் இரண்டு கைதிகள் இருந்தனர்.
இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications